இந்தியத் திரையுலகில் அழகாலும் அபார நடிப்புத் திறமையாலும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களைக் வென்றவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 2018ஆம் ஆண்டு அவர் மறைந்த செய்தி உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அவரது திரைப்பயணம் மற்றும் வாழ்க்கைப் பாதையை விவரிக்கும் புதிய சுயசரிதை புத்தகம் விரைவில் வெளியாகவுள்ளது.
‘எம்பிரஸ் ஸ்ரீதேவி: தி டெஃபனிடிவ் பயோகிராஃபி ஆஃப் ஸ்ரீதேவி’ (Empress Sridevi: The Definitive Biography of Sridevi) என்று பெயரிடப்பட்டுள்ள இப்புத்தகத்தைப் பிரபல எழுத்தாளர் தீரஜ் யூ. குமார் எழுதியுள்ளார்.
உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, இப்புத்தகத்தின் கவர்ச்சிகரமான முகப்பு அட்டையை அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்.
குழந்தை நட்சத்திரமாகத் தம் பயணத்தைத் தொடங்கி, தென்னிந்திய சினிமா முதல் பாலிவுட் வரை அரை நூற்றாண்டுக் காலம் ஆண் உச்ச நட்சத்திரங்களுக்கு இணையாக ஆட்சி செய்தவர் ஸ்ரீதேவி.
அவரது ஆரம்பகாலப் போராட்டங்கள், திரையுலகச் சாதனைகள், தனிப்பட்ட வாழ்க்கையின் சுவாரசியமான பக்கங்கள் ஆகியவற்றை மீண்டும் திரும்பிப் பார்க்க இப்புத்தகம் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


