இயக்குநர் அறிவழகன் இயக்கிய ‘சப்தம்’ படத்தில் ஆதி நடித்துள்ளார். அந்தப் படத்தைப் பார்த்த நானி, நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் ‘சப்தம்’ ஒன்று என்று பாராட்டியுள்ளார்.
2009ஆம் ஆண்டு இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஈரம்.’ இந்தப் படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஆதி, மக்கள் மனதை வென்றார். இயக்குநர் அறிவழகனுக்கு ‘ஈரம்’ திரைப்படம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது.
அதனைத்தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் ‘சப்தம்’ படத்தில் இணைந்துள்ளளது. மர்மம் நிறைந்த கதைக்களத்தின் பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. இதில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் பிப்ரவரி 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
படத்தைப் பார்த்த நானி படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் படம் பற்றி கூறுகையில், “ தொழில்நுட்ப ரீதியாக இப்படம் தரமாக வந்துள்ளது. மர்மம் நிறைந்த திரைப்படமாக இருந்தாலும் படத்தின் உணர்வுபூர்வமான காட்சிகள் மிக நன்றாக உள்ளன. கண்டிப்பாக இப்படத்தை திரையரங்கில் காண வேண்டும். நான் பார்த்த மிகச்சிறந்த திரைப்படங்களுள் ‘சப்தம்’ திரைப்படமும் ஒன்று,” என்று கூறியுள்ளார்.