இந்தியத் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மரணம்.
‘நாட்டாமை’, ‘பூவே உனக்காக’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 99 திரைப்படங்களைத் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாரித்து புகழ்பெற்றவர் திரு சௌத்ரி.
அவரது மகன்கள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரும் நடிகர்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 3 மணியளவில் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது கார் விபத்தில் சிக்கி திரு சௌத்ரி உயிரிழந்தார்.
மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படங்களைத் தயாரித்த திரு செளத்ரி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 35 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்.
விக்ரமன், கே.எஸ். ரவிக்குமார், ராஜகுமாரன், எழில், லிங்குசாமி, பேரரசு என அவர் அறிமுகப்படுத்திய இயக்குநர்கள் பலர்.
ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட திரு சௌத்ரி, ஆரம்பத்தில் இரும்பு ஏற்றுமதியிலும் நகைத் தொழிலிலும் ஈடுபட்டார்.
தமது தயாரிப்பு நிறுவனம் மூலம் முதல் மூன்று படங்களை மலையாளத்தில் தயாரித்த திரு சௌத்ரி, தமிழில் முதல் படமாகத் தயாரித்தது ‘புது வசந்தம்’.
தொடர்புடைய செய்திகள்
முரளி கதாநாயகனாக நடித்த அந்தப் படம்தான் இயக்குநர் விக்ரமன் இயக்கிய முதல் படம். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
திரு சௌத்ரியின் தயாரிப்பில் லிவிங்ஸ்டன் - கெளசல்யா நடிப்பில் ‘சொல்லாமலே’ படம் தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதே படத்தை, வெங்கடேஷ் - ட்விங்கிள் கண்ணா நடிப்பில் ‘சீனு’ என்ற பெயரில் தெலுங்கிலும் கோவிந்தா - ராணி முகர்ஜி நடிப்பில் ‘பியார் தீவான ஹோத்தா ஹை’ என்ற பெயரில் இந்தியிலும் தயாரித்து அங்கேயும் வெற்றி கண்டார் திரு சௌத்ரி. அவர் தயாரித்த ஒரே இந்திப் படமும் அதுதான்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த 50வது படமான ‘ஆசை ஆசையாய்’தான் ஆர்.பி.சௌத்ரியின் இளைய மகன் ஜீவா அறிமுகமான முதல் படம்.
இன்று பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவரும் ரவி மரியாதான் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர்.
பூவே உனக்காக’, ‘லவ் டுடே’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, ‘ஷாஜகான்’, ‘திருப்பாச்சி’, ‘ஜில்லா’ என விஜய்யை வைத்து ஆறு திரைப்படங்களையும் ஆர்.பி.செளத்ரி தயாரித்தார். திருப்பாச்சி திரைப்படத்தில்தான் இயக்குநராகப் பேரரசு அறிமுகமானார்.
நடிகர் சரத்குமாருடன் புரியாத புதிர் தொடங்கி, சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, கேப்டன், நாட்டாமை, சூர்யவம்சம், சிம்மராசி, மாயி, விண்ணுக்கும் மண்ணுக்கும், சமுத்திரம் ஆகிய 10 படங்களைத் திரு சௌத்ரி தயாரித்தார்.
தமிழக அரசின் மாநில விருதுகள், ஃபிலிம்ஃபேர் விருதுகளை வாங்கிய திரு சௌத்ரி, பல படங்களையும் விநியோகம் செய்திருக்கிறார்.
திரு சௌத்ரியின் தயாரிப்பில் இறுதியாக வெளிவந்த படம் வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடித்த `மாரீசன்’.
99 படங்களைத் தயாரித்த திரு சௌத்ரி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் கதாநாயகனாக வைத்துப் படம் இயக்கியதில்லை.

