தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அவர் பிரபாசுடன் நடித்துள்ள ‘த ராஜா சாப்’ வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) வெளியானது.
அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், ஓடிடி, சமூக ஊடகங்கள் காரணமாக மொழிக்கான எல்லைகள் மங்கிவிட்டது என்றும் நடிகர், நடிகைகளுக்கு இது அற்புதமான காலம் என்றும் கூறினார்.
மேலும், “எந்த மொழியில் நல்ல படத்தைக் கொடுத்தாலும் அது மக்களுக்குப் பிடித்திருந்தால், பரவலாகச் சென்றடையும். மொழி தாண்டிப் படங்களும் நடிகர்களும் வெற்றிபெறும் நிலைமை தற்போது உருவாகியிருக்கிறது,” என மாளவிகா தெரிவித்தார்.
தற்போது திரையுலகில் நிலவும் சூழலைத் தனிப்பட்ட முறையில் மிகவும் விரும்புகிறேன் எனக் கூறிய அவர், பல்வேறு துறைகளில் உள்ள முன்னணி கதாநாயகர்களுடனும் சிறந்த இயக்குநர்களுடனும் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
மலையாளத்தில் மோகன்லாலுடன் ‘ஹிருதயபூர்வம்’, தமிழில் விக்ரமுடன் ‘தங்கலான்’, விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தெலுங்கில் பிரபாசுடன் ‘த ராஜா சாப்’ ஆகிய படங்களில் மாளவிகா நடித்திருக்கிறார்.
“முன்னணி நடிகர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெவ்வேறு கதை அம்சங்கள் நிறைந்த படங்களில் நடிப்பதையும் பலவிதமான இயக்குநர்களிடம் பணியாற்றுவதையும் விரும்புகிறேன்,” என்றார் மாளவிகா.
மேலும், ‘தங்கலான்’ படத்தில் பழங்குடி தெய்வமாக நடித்தேன். ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் புனேவைச் சேர்ந்த யதார்த்தமான நகரத்துப் பெண், ‘த ராஜா சாப்’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் என முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறேன். ஒரு நடிகையாக என்னை நானே ஆராய்ந்து பார்ப்பதும் எனக்குப் பிடித்திருக்கிறது,” என்று அவர் தெரிவித்தார்.

