பொருளியல் பிரச்சினை, போதுமான திரையரங்குகள் கிடைக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்ட ‘படை தலைவன்’ படம் அடுத்த வாரம் வெளியாகிறது.
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார்.
இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் கடந்த மே 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், கடைசி நேரத்தில் போதுமான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்படுவதாகப் படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில், புதிய வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி, எதிர்வரும் ஜூன் 13ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்றும் மொத்தம் 500 திரையரங்குகளில் படம் திரையிடப்படும் என்றும் படக்குழு கூறியுள்ளது.
காட்டு யானைகளின் வாழ்வியலை அலசும் இப்படத்தின் கதை, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் அழகாக விவரிக்குமாம். இப்படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. அதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, காலஞ்சென்ற விஜயகாந்தைக் காட்சிப்படுத்தி இருந்தனர்.
இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாகச் சொல்கிறார் இயக்குநர் அன்பு.