சுந்தர்.சி இயக்கத்தில் உருவான ‘அரண்மனை’ படம் வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன. அண்மையில் வெளியீடு கண்ட ‘அரண்மனை 4’ படமும் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதையடுத்து, முன்னணி நடிகர்களும் சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தற்போது ‘கேங்கர்ஸ்’ என்ற படத்தை சுந்தர்.சி. இயக்கி முடித்துள்ளார். இதில் வடிவேலு, கேத்ரீன் தெரசா, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைகாண உள்ள நிலையில், அடுத்து நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தைத் தயாரித்து, இயக்க உள்ளாராம் சுந்தர்.சி. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
இந்நிலையில், ‘அரண்மனை-5’ படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகளில் சுந்தர்.சி குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அநேகமாக, ஐந்து மாதங்களுக்குள் மொத்த படத்தையும் முடித்து வெளியிட சுந்தர்.சி திட்டமிட்டுள்ளதாகவும் இப்படத்துக்காக பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
‘அரண்மனை’ படத்தின் நான்காம் பாகம் திரையரங்குகளில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.