கடந்த ஆண்டு புதிய படங்களுக்கு இணையாக மறுவெளியீட்டில் (ரீ-ரிலீஸ்) வசூலை அள்ளிய படம் ‘கில்லி’. அந்தப் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.
மறுவெளியீட்டுக்கான விநியோக உரிமையைக் கைப்பற்றி வெளியிட்டார் சக்திவேலன். தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வெற்றிகண்ட ‘கில்லி’ மறுவெளியீட்டிலும் வெற்றியடைந்தது.
‘கில்லி’யைத் தொடர்ந்து, ‘குஷி’, ‘சிவகாசி’ ஆகிய படங்களையும் வெளியிடத் திட்டமிட்டு இருப்பதாக ஏ.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு படங்களுமே விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படங்களாகும். குறிப்பாக ‘குஷி’ படத்தின் பாடல்கள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
அதே போல் ‘சிவகாசி’ படமும் வர்த்தகரீதியில் விஜய்க்கு பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.
‘ஹரி ஹர வீர மல்லு’ படத்தின் வெளியீட்டுப் பணிகளை முடித்துவிட்டு, ‘குஷி’ மற்றும் ‘சிவகாசி’ படத்தின் மறுவெளியீட்டுப் பணிகளை ஏ.எம்.ரத்னம் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.