அல்லு அர்ஜுன் நடிப்பில் 2020ஆம் ஆண்டு வெளியான படம், ‘அல வைகுந்தபுரமுலோ’. த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, அல்லு அர்ஜுன் ஜோடியாக அம்மு எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, இவரது திரையுலக வாய்ப்பு உச்சிக்குச் சென்றது. இதையடுத்து, அவருக்கு தென்னிந்தியாவில் இருந்து அதிக பட வாய்ப்புகளும் வரத் தொடங்கின.
இவர் தற்பொழுது தமிழில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர வினோத் இயக்கத்தில் விஜய்யின் 69வது படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே தனது இந்திப் படம் ஒன்றின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, ‘அல வைகுந்தபுரமுலோ’ ஒரு தமிழ் படம். அந்தப் படம் உலகெங்கும் வெற்றி நடைபோட்டது,” என்று கூறினார்.
உண்மையில் அந்தப் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
“தான் எந்த மொழியில் நடித்தோம் என்பதே தெரியாமல் பேசுகிறார். வடக்கில் இருந்து நடிக்க வருபவர்களை அனைத்து மொழிகளிலும் நடிக்க விட்டால் இதுதான் நடக்கும்,” என்று தெலுங்கு ரசிகர்கள் காரசாரமாக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பூஜா ஹெக்டே தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை பதிவிடப்படவில்லை.