நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருக்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பு தன்னைத்தேடி வந்தபோது அதை நிராகரித்ததாகக் கூறினார் மலையாள நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மோகன்லால் நடித்திருக்கும் ‘எம்புரான்’ படத்தை அவர் இயக்கியிருக்கிறார்.
இப்படம் ‘லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகம் எனச் சொல்லப்படுகிறது.
எம்புரான் படத்தின் விழாவில் பேசிய பிரித்விராஜ், “லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் தன்னிடம் எங்கள் தயாரிப்பில் ரஜினியை வைத்து படம் ஒன்றை இயக்க முடியுமா எனக் கேட்டார். ஒரு புது இயக்குனருக்கு அது மிகப்பெரிய வாய்ப்பு,” எனக் கூறினார்.
“ஆனால் பகுதிநேர இயக்குனரான என்னால் அந்தக் குறிப்பிட்ட நேரத்திற்குள் ரஜினிக்குக் கதை தயார் செய்ய முடியாது எனக் கூறிவிட்டேன்,” என்றார் அவர்.

