நடிகை பிரியங்கா சோப்ரா மீண்டும் ஒரு பிரம்மாண்ட ஹாலிவுட் அறிவியல் புனைவு அடிதடிப் படத்தில் நடிக்க உள்ளார்.
‘தமிழன்’ தமிழ்த் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்து, தற்போது ஹாலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக விளங்குகிறார் பிரியங்கா சோப்ரா. அவர் தற்போது எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘வாரணாசி’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், பிரியங்கா புதிய ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் ரஸ்ஸல் குரோவ் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘புளூஃபிளை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குநர் நிம்ரோட் ஆண்டல் இயக்குகிறார்.
காங்கோ காடுகளில் விபத்துக்குள்ளான ஒரு விமானத்தை மீட்கும் ரகசிய ராணுவ நடவடிக்கையை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
அதிரடி சண்டைக் காட்சிகளுடன் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள பிரியங்கா சோப்ராவின் புதிய அறிவிப்பு அவரது ரசிகர்களைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


