பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி தற்போது ‘வாரணாசி’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு 2027, ஏப்ரல் 7ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை இயக்குவதற்காகப் பணத்தை சம்பளமாக பெறாமல், வித்தியாசமான ஒப்பந்தம் ஒன்றை ராஜமௌலி செய்துள்ளார்.
உலக அளவில் தனது படங்களுக்குப் பெரும் வரவேற்பு இருப்பதை அறிந்த அவர், வெளிநாட்டில் இப்படத்தின் வெளியீட்டு உரிமை என்ன விலைக்கு விற்பனையாகிறதோ, அதையே தனது சம்பளமாகப் பெற்றுக்கொள்வதாக அவர் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்போதே இப்படத்தின் வெளிநாட்டு உரிமைக்காக 100 கோடி ரூபாய்க்கும் மேல் விலை பேசப்படுகிறது. ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகே இதுகுறித்த வியாபாரத்தை தொடங்குவதாக படக்குழு முடிவு செய்துள்ளது.
எப்படியும் 150 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இது விலைபோகும் எனக் கணிக்கப்படுகிறது. இது நடந்தால், இந்தியாவில் அதிகச் சம்பளம் பெறும் இயக்குநர் என்ற பெருமையை ராஜமௌலி பெறுவார்.

