நடிகர் சிரஞ்சீவி ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து ராம் சரண் சார்பில் வெள்ள நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை வழங்கினார்.
கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து பல மாநில திரைப்பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் ஆந்திர முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு பணம் கொடுத்து உதவினர்.
ஆந்திர அரசு வெள்ள நிவாரணப் பணிகளைத் துரிதமாகவும் தீவிரமாகவும் மேற்கொண்டது. ஆனாலும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இன்னும் நிதி வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி ராம் சரண் சார்பில் 1 கோடி ரூபாயை நிவாரணத்திற்கு வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து சந்திரபாபு நாயுடு அவரது எக்ஸ் தளத்தில், “சிரஞ்சீவி எப்போதும் மனித நேயமிக்க செயல்களில் அதிகம் ஈடுபடுபவர். நீங்கள் கொடுத்த நிதியுதவிக்கு மிக்க நன்றி. இந்த உதவி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்,” என்று பதிவிட்டுள்ளார்.
அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்குக் கதை எழுதியுள்ளார். இப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று அறிவித்துள்ளது படக்குழு.