நமக்காக உழைப்பவர்களுக்கு நாம் உரிய மரியாதை தரவேண்டும் என்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது இவர் ‘ஓ சுகுமாரி’ என்ற தெலுங்குப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
குடும்பப் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு, தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷும் கலந்துகொண்டார்.
படப்பிடிப்பின்போது ஒருநாள் சமையல் கலைஞர்கள் படக்குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் சுடச்சுட சிற்றுண்டி தயார் செய்து பரிமாறியுள்ளனர்.
தன் பங்குக்கு தோசை வாங்கி சாப்பிட்ட ஐஸ்வர்யா ராஜேஷை, அதன் சுவை மயக்கிவிட்டதாம். இதையடுத்து சமையல் கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், அவர்களை அடுப்பில் இருந்து விலகச் செய்துவிட்டு தானே தோசை சுட்டுள்ளார்.
அதைப் படக்குழுவினருக்கு ஐஸ்வர்யா பகிர்ந்தளித்து மகிழும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
இது குறித்து யாரேனும் கேட்டால், “படக்குழுவில் உள்ள அனைவரும் உன்னைப் போன்ற கலைஞர்களின் நலனுக்காகவும் படத்தின் வெற்றிக்காகவும் கடுமையாக பாடுபடுகிறார்கள்.
“எனவே அவர்களுக்கு நன்றியும் மரியாதையும் தெரிவிக்கும் விதமாகவே இவ்வாறு செய்தேன்,” என்று கூறுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

