இயக்குநர் ராஜுமுருகனும் நடிகர் சசிகுமாரும் இணைந்துள்ள புதுப்படத்துக்கான படப்பிடிப்பு சத்தமின்றி நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த மூன்று மாதங்களாக கோவில்பட்டி பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம் ராஜுமுருகன். இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.
’குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த ராஜுமுருகன், பின்னர் இயக்கிய ‘ஜிப்ஸி’, ’ஜப்பான்’ ஆகிய படங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், அவர் எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்தார் என்றும் அவரை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அவர் சசிகுமாருடன் கைகோர்த்துள்ளார்.
இந்தப் படத்தில் இந்தி நடிகை ஆலியா பட் நாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இதுவரை அத்தகவல் உறுதியாகவில்லை. இந்நிலையில், சினேகாவும் இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

