‘பாகுபலி’ திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் தூக்கிய பிரம்மாண்ட லிங்கம், ‘முதல்வன்’ படத்தின் ‘அழகான ராட்சசியே’ பாடல் காட்சியில் இடம்பெற்ற சூரியகாந்தி, மக்காச்சோளம், ‘களவாணி’ திரைப்படத்தில் மண் சுவர் போன்றவற்றின் பின்னணியில் இருந்தவர் ‘சிற்பக்கலை ஞானி’ எனக் கொண்டாடப்படும் முனைவர் த. குணசேகரன்.
“சினிமாவைவிட்டால் வேறு வேலை எனக்குத் தெரியாது. ஆனால் நான் செய்யும் வேலை வெளியில் யாருக்கும் தெரிவதில்லை,” என்றார் குணசேகரன்.
தஞ்சாவூரில் பிறந்த அவர், சிற்ப வடிவமைப்பில் தன் வல்லமையைக் கொண்டு திரைப்படக் கலை இயக்குநர் எனும் நிலைக்கு உயர்ந்தார். “திரைப்படத்தில் நடிகர்கள் மட்டும் திரையில் தோன்றுவதில்லை; பின்னணியில் பல பொருள்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றைத் தீர்மானிப்பது கலை இயக்குநரே,” என்றார் குணசேகரன்.
‘நினைத்தாலே இனிக்கும்’, ‘தாண்டவம்’, ‘எங்கேயும் காதல்’, ‘வெடி’, ‘ஈசன்', ‘போராளி’, ‘தலைவா’, ‘களவாணி’ என 20 படங்களுக்கு மேல் உதவி கலை இயக்குனராக பணியாற்றினார். தொடர்ந்து, ‘களவாணி 2’, ‘ர’, ‘கனவு வாரியம்’, ‘IPC 376’, ‘P2’, ‘மூன்றாம் மனிதன்’, ‘உலக மகா உத்தமர்கள்’, ‘நாணயம்’, ‘சாகுந்தலம்’ உள்ளிட்ட கிட்டத்தட்ட 15 படங்களில் கலை இயக்குநராகப் பணியாற்றினார்.
‘கனவு வாரியம்’ திரைப்படத்துக்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘ரெமி’ (Remi) விருது உட்பட, அனைத்துலக அளவிலான பல விருதுகள் கிடைத்தன. ‘சாகுந்தலம்’ எனும் சமஸ்கிருதத் திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது.
குணசேகரனுக்குச் சிறுவயதிலிருந்தே சிற்பக்கலை மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. “என்னுடைய பரம்பரை சிற்பக்கலை தொடர்புடையது. என் முப்பாட்டன்கள் சிற்பிகள். பெற்றோர் விவசாயிகள்,” என்றார் அவர்.
தஞ்சாவூரில் நடந்த ஓவியப் போட்டியில் 20 பேரில் முதல் மாணவராக வெற்றி பெற்ற குணசேகரனுக்கு மரச் சிற்பக்கலைப் பயிற்சி வழங்கப்பட்டது.
பெற்றோரின் மறைவுக்குப்பின் பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்த அவர், ‘ஏவிஎம் ஸ்டூடியோ’வுக்கு எதிரே அமைந்திருந்த ‘ரிஷபம் மார்ட்ஸ்’ நிறுவனத்தில் பதாகைகள் செய்துவந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போதுதான் திரையுலகில் முதல் பெரிய வாய்ப்பு கிடைத்தது. ‘அண்ணாமலை’ படத்தின் ‘ரெக்க கட்டி பறக்குதடி அண்ணாமலை சைக்கிள்’ பாடலில் மிதிவண்டியில் ‘அண்ணாமலை’ என்ற பெயரை எழுதினார். அதைத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன.
“நான் பொருள்களைத் தெர்மோகோலில் செதுக்கத் தொடங்கினேன். அப்போதெல்லாம் யாருக்கும் இந்த மாதிரி தெர்மோகோலில் செய்யலாம் எனத் தெரியாது,” என்றார் குணசேகரன்.
‘மகாநதி’ திரைப்படத்தில் கல் எறியும் காட்சிக்காக, இவர் செய்து கொடுத்த தத்ரூபமான போலிக் கருங்கல் பாராட்டுகளைக் குவித்தது. சண்டைக் காட்சிகளில் பாதுகாப்பாக, அசல்போல உடையும் போத்தல்கள், நாற்காலிகள் போன்றவற்றைச் செதுக்குவதில் குணசேகரன் வல்லவர்.
அதுமட்டுமன்றி, தோட்டா தரணி, ஆர்.கே.நாகு, ஜேகே போன்ற பிரபல கலை இயக்குநர்களிடம் உதவிக் கலை இயக்குநராகவும் அவர் பணியாற்றியுள்ளார்.
‘வெடி’, ‘தூள்’, ‘திருமலை’, ‘சாமி’, ‘பகவதி’, ‘எங்கேயும் காதல்’, ‘ஈசன்’, ‘போராளி’, ‘சுப்பிரமணியபுரம்’ உள்ளிட்ட 50-60 திரைப்படங்களுக்கும் வைரமுத்துவின் ‘நாட்படு தேறல்’ தொகுப்புக்கும் அவர் தலைப்பு அட்டை உருவாக்கியுள்ளார்.
தற்போது அவர் தம் நெடுங்கால நண்பரான நடிகர் சூரியின் திரைப்படத்துக்கும் சசிகுமாரின் இரு திரைப்படங்களுக்கும் கலை இயக்குநராகப் பணியாற்றவுள்ளார்.
இவரது கலை இயக்கத்தில் ‘சிவா மனசுல சக்தி 2’, ‘அரிசி’ ஆகிய இரு திரைப்படங்களும் கூடிய விரைவில் வெளிவரவுள்ளன.
அண்மையில் பல கின்னஸ் உலகச் சாதனைகள் படைத்த யோகா நிபுணர் யோகராஜ் உருவத்தில் ஒரு சிற்பத்தை ஹாங்காங்கில் ‘ஏர் இந்தியா’ நிகழ்ச்சியில் நேரடியாகச் செதுக்கவும் செய்தார் குணசேகரன்.
வாய்ப்புகள் இருந்தால் சிங்கப்பூரில் சிற்பக்கலையிலும் கலை இயக்கத்திலும் கால்பதிக்க விரும்புகிறார் அவர்.

