ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் என தமிழகம் முழுவதும் தனித்தனியாக திரையரங்குகளைக் கட்டவேண்டும் என்கிறார் இயக்குநர் பேரரசு.
ஒரு காலத்தில் விஜய் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களை இயக்கிய இவர், இன்று பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு அதிரடியாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில், சகாயநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செல்ல குட்டி’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அண்மையில் கலந்துகொண்டு பேசினார் பேரரசு.
அவர் பேசுகையில், எம்ஜிஆர், ரஜினிகாந்தின் தொடக்கக் காலகட்டங்களில் திரைப்படம் என்பது ஏழைகளுக்கான சாதனமாக இருந்தது என்றும் உழைக்கும் வர்க்கம் தங்கள் களைப்பைத் தீர்த்துக்கொள்ளும் விதமாக திரையரங்குகள் இருந்தன என்றும் குறிப்பிட்டார்.
“கலைக்குடும்பத்தில் பிறந்து நடிகராக உருவாகியுள்ள ஒருவர், தமிழகத்தின் துணை முதல்வராகத் தேர்வாகி உள்ளார். அவரிடம் நாம் மனம் விட்டுப் பேச முடியும்.
“இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விலை, வாகன நிறுத்துமிட கட்டணம், உணவுப் பொருள்களின் விலை ஆகியவை சராசரி மக்களுக்கு ஏற்றார்போல் இல்லை. எனவேதான் ஏழைகள், பணக்காரர்களுக்குத் தனித்தனி திரையரங்குகள் எனப் பேச வேண்டியுள்ளது.
“ஏழைகள் சாப்பிட அம்மா உணவகம் என்ற திட்டத்தை செயல்படுத்தியதுபோல் ஏழைகளுக்கான திரையரங்குகளையும் அரசாங்கமே கட்டவேண்டும். பிரச்சினைக்கு இதுதான் தீர்வு,” என்றார் பேரரசு.