மோகன்லால் நடிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒரு காரின் பதிவு எண் (நம்பர் பிளேட்), தன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜீவ் என்ற விவசாயி மூணார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தமது புகாரில், “படத்தில் மோகன்லால் பயன்படுத்தும் காரில் எனது சொந்த வாகன எண் அப்படியே உள்ளது. எனது காரும் அவர் ஓட்டும் காரும் வெவ்வேறு கார் மாடல்கள் என்றாலும், எண் ஒன்றாக இருப்பதால் மக்கள் என் காரை ‘த்ரிஷ்யம் கார்’ என்றும் என்னை ‘திரிஷ்யம் ராஜீவ்’ என்றும் கிண்டல் செய்கிறார்கள்.
“இது குற்றப் பின்னணியைக் கொண்ட படம் என்பதால், எனக்குச் சட்டவிரோதச் செயல்களில் தொடர்பு இருக்குமோ என வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இது எனக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது,” என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, படத்தில் அந்த காரின் எண் தெரியும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மூணார் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

