தனியார் விமான நிறுவனத்தை விமர்சித்து, நடிகை ஷ்ருதிஹாசன் தமது சமூக ஊடகப்பக்கத்தில் வெளியிட்ட பதிவு பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மும்பையில் இருந்து அவர் பயணம் மேற்கொள்ள இருந்த இண்டிகோ நிறுவன விமானம் நான்கு மணி நேரம் தாமதமாகிவிட்டதாம். மேலும் இது தொடர்பாக அந்நிறுவனம் பயணிகளுக்கு எந்தவிதத் தகவலையும் முறையாகத் தெரிவிக்கவில்லை எனச் சாடியுள்ளார் ஷ்ருதி.
“நான் பொதுவாக யாரையும் குறைசொல்ல மாட்டேன். ஆனால் நான்கு மணி நேரம் காத்திருக்க வைத்தனர். இதன் மூலம் அதிகப்படியான குழப்பத்தையும் ஏற்படுத்திவிட்டனர்.
“உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா எனத் தமது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
“குறித்த நேரத்தைக் கடந்து காத்திருப்பது எவ்வளவு சிரமமானது என்பதை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். சில காரணிகள் எங்களது கட்டுப்பாட்டை மீறியது என்பதைப் பயணிகள் புரிந்துகொள்வார்கள் என நம்புகிறோம்,” என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.