கமல்-மணிரத்னம் கூட்டணியில் வெளிவந்திருக்கும் தக் லைஃப் படத்தின் முத்த மழை பாடலை பாராட்டி பேசியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படம் வெளியாவதற்கு முன்பே ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் இணையத்தில் பரவியது. அதிலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் சின்மயி பாடிய ‘முத்தமழை பாடல்’ காணொளி இன்றளவும் நம்பர் ஒன்னாக இருக்கிறது.
பல ரசிகர்கள் பாடகி தீ பாடிய பாடலா? சின்மயி பாடிய பாடலா? எது சிறந்தது என்ற விவாதத்தை சமூகவலைத்தளங்களில் பட்டிமன்றம் நிகழ்த்தும் அளவு முத்தமழை பாடல் எல்லோரையும் கட்டிப்போட்டது.
அண்மையில் சின்மயி பாடிய முத்தமழை பாடலை பாராட்டியிருந்த இயக்குநர் வெங்கட் பிரபு ‘சொல்ல வார்த்தையே இல்லை’ என பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் பாடகி தீ, ஏஆர் ரஹ்மான் இருவரையும் குறிப்பிட்டு முத்தமழை பாடலை பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
முத்தமழை பாடலில் சின்மயி, தீ இருவரின் குரலையும் கேட்ட ரசிகர்கள், சின்மயி பாடியது இதயத்தை வருடுகிறது, தீ பாடியது இதயம் முழுவதும் வலியை கடத்துகிறது என பாராட்டி வருகின்றனர்.
இதற்கிடையே இந்தப் பாடலையும், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானையும் பாராட்டி பேசியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.
தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் அவர், “இந்தப் பாடலைக் கேட்டபோது நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போய் - உயிரில் மின்சாரம் பாய்ந்ததுபோல் இருக்கிறது. இதெல்லாம் ஏஆர் ரஹ்மான் அவர்களால் மட்டுமே முடியும்,” என பாராட்டி எழுதியுள்ளார்.
இந்தப் பாடலைப் பாடிய சின்மயிக்கு வலுத்த ஆதரவு பெருகி வருகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான தக் ஃலைப் படத்தின் திரைக்கதை காரணமாக முதல் நாளில் இருந்தே அந்த படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகத் தொடங்கின.
இதற்கிடையில் இந்தப் படத்தின் வசூல் படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எதிர்மறையான விமர்சனங்களால் இந்திய அளவில் முதல் நாளில் 17 கோடி வசூலித்த இப்படம், இரண்டாவது நாளில் 7.15 கோடியும், மூன்றாவது நாளில் 7.75 கோடியும், நான்காவது நாளில் 6.5 கோடியும் வசூலித்த நிலையில், ஐந்தாவது நாளில் 3.25 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.
அந்த வகையில் இதுவரை இந்த படம் 40 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த ஐந்து நாள்களுக்கும் முன்பே நுழைவுச் சீட்டுகளை வாங்கி இருந்ததால் இந்த வருமானம் கிடைத்திருக்கிறது. அதன் பின்னர் ஆறாவது நாளில் இருந்து திரையரங்குகள் வெற்றிடமாய்க் கிடப்பதாக கூறப்படுகிறது.
இது ‘இந்தியன்- 2’ படத்தை விடக் குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மந்தமான வசூல் காரணமாகவே இதுவரை ‘தக் ஃலைப்’ படக்குழு அப்படத்தின் வசூல் குறித்த எந்த தகவலையும் வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.