இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்துவரும் ‘பெத்தி’ திரைப்படத்தில், ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாட நடிகை ஷ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகியுள்ளார்.
முதலில் இந்தப் பாடலில் நடிக்க சமந்தா, மிருணாள் தாக்கூர், சம்யுக்தா மேனன் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் அவர்கள் மறுக்கவே, தற்போது அந்த வாய்ப்பு ஷ்ருதி ஹாசனை எட்டியுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த அதிரடியான பாடலின் படப்பிடிப்பு, வரும் மே மாதம் ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே, ‘எவடு’ திரைப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்த ஸ்ருதி ஹாசன், நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் அவருடன் திரையைப் பகிர்ந்துகொள்வது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, இப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது தொழில்நுட்பக் காரணங்களால் ஜூன் மாதத்திற்குத் தள்ளிவைக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘சிக்கிரி’ பாடல் ஏற்கெனவே இணையத்தைக் கலக்கி வரும் நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜான்வி கபூர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படத்தில், ஷ்ருதி ஹாசனின் சிறப்பு நடனம் கூடுதல் பலமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

