நடிகர் விஜய்யின் இறுதிப் படமான ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு, தற்போது அதன் வெளியீட்டுத் தேதியை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்துள்ளது.
அதன்படி ‘ஜன நாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், அதற்குள் இதன் வெளிநாட்டு வெளியீட்டு உரிமை ரூ.75 கோடிக்கு விற்பனை ஆகி இருக்கிறது.
‘ஜன நாயகன்’ படத்தின் 4வது நாயகி
‘ஜன நாயகன்’ படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி என மூன்று நாயகிகள் இருக்கும் நிலையில், தற்போது நான்காவது நாயகியாக ஷ்ருதிஹாசன் இணைந்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வரும் ஷ்ருதிஹாசன், விரைவில் ‘ஜன நாயகன்’ படப்பிடிப்பில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஜன நாயகன்’ படத்தில் ஸ்ருதிஹாசன்
நடிகை ஷ்ருதிஹாசனும் விஜய்யும் இணைந்து நடிப்பது இது முதன்முறை அல்ல. இதற்கு முன்னர் கடந்த 2015ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்த ‘புலி’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஷ்ருதி.
அப்படத்திற்குப் பின் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக கூட்டணி அமைக்காமல் இருந்த நிலையில், தற்போது ‘ஜன நாயகன்’ படம் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ஷ்ருதிக்கு முக்கியமான வேடம் இருக்கும் என்று கூறப்படுகிறது.