ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான்கான் நடித்துள்ள இந்திப் படம் ‘சிக்கந்தர்’ நோன்புப் பெருநாளை முன்னிட்டு உலகெங்கும் திரை கண்டுள்ளது.
இந்நிலையில், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே, இணையத்தில் இப்படம் வெளியாகிவிட்டது. குறிப்பிட்ட இணையத்தளத்தில் தரமான பதிப்பாக இப்படம் வெளியானதை அடுத்து, படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
“இதுபோன்ற முறைகேடான செயல்பாடுகளை ரசிகர்கள் ஊக்குவிக்கக் கூடாது. இத்தகைய செயல்களைப் புரிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என இந்தி திரையுலகத்தினர் குரல் கொடுத்துள்ளனர்.
சல்மான் கான் படத்தைக் காண ஆவலுடன் காத்திருந்த அவரது ரசிகர்களும் இணையத்தில் இப்படம் முறைகேடாக வெளியானதை அடுத்து வருத்தம் அடைந்துள்ளனர். அனைவரும் திரையரங்குக்குச் சென்று படம் பார்க்க வேண்டும் என ரசிகர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘சிக்கந்தர்’ படத்தில் சல்மான் கான் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி, சத்யராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.