சுதா கொங்கரா இயக்கிய ‘பராசக்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் தயாராகி வருகிறார்.
ராதிகா நடிப்பில் ‘தாய் கிழவி’ படத்தை தயாரித்து, அதில் இடம்பெறும் ‘தாய் கிழவி வாரா’ என்ற பாடலையும் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
இப்படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசனின் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
தனது திரைப்பயணத்தில் 15வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அதையொட்டி தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மகன்கள் குகன், பவன் ஆகியோருடன் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அண்மையில் சாமி தரிசனம் செய்தார்.
மகன்களுக்கு மொட்டை அடித்து வேண்டுதலை நிறைவேற்றிய பிறகு பேசிய சிவகார்த்திகேயன், ‘நான் 14 ஆண்டுகள் நிறைவு செய்ததை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் எனக்கு பொறுப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.
“திரையுலகில் இன்னும் பல விஷயங்களை சாதிக்க வேண்டும். அனைவரது அன்புக்கும் நன்றி. 14 ஆண்டு கால பயணத்தில் நிறைய கஷ்டங்கள், தோல்விகள் ஏற்பட்டுள்ளன.
“அதைத்தாண்டி மக்கள் கொடுக்கும் அன்பை மட்டும் பார்த்தேன். அனைவரும் என்னிடம் இருந்து எப்படிப்பட்ட படத்தை எதிர்பார்க்கிறார்களோ, அப்படிப்பட்ட படமாக எனது அடுத்த படம் இருக்கும்,” என்றார்.

