சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படப்பிடிப்பு கடலில் நடந்தபோது படகு கவிழ்ந்து ரூ.60 லட்சம் மதிப்பிலான புகைப்படக்கருவி கடலில் மூழ்கியது.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மண்டாடி’. இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில் நடைபெற்றது.
அப்போது புகைப்படக்கருவி வைக்கப்பட்டிருந்த படகு திடீரென கடலில் தடுமாறியது. அதில் புகைப்படக்கருவி கடலில் மூழ்கியது. சுமார் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ‘ரெட்’ புகைப்படக் கருவி அது. மேலும், சில பொருள்களும் மூழ்கியதாகத் தெரிகிறது.
நல்ல வேளையாக வேறு யாரும் கடலில் மூழ்கவில்லை. மீனவர்கள் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்தியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடலும் கடல் சார்ந்த பகுதிகளிலும் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நடந்து வருகிறது. அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர் எஸ்ஆர் கதிர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.