‘புஷ்பா 2’ படத்தில் நடித்த ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் தன்னுடைய இரண்டாவது அடையாளம் என்கிறார் ராஷ்மிகா மந்தனா.
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் 4 நாளில் உலகம் முழுவதும் ரூ.829 கோடி வசூலித்துள்ளது.
இப்படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராஷ்மிகாவின் நடிப்பும் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், இதன் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகளை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய கதாபாத்திரம் பற்றியும் கூறியுள்ளார். அதில், “ஸ்ரீவள்ளிக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு சிறப்பு வாய்ந்தது. அவள் என் 2வது அடையாளமாகிவிட்டாள்.
“எனது திரைப்பயணத்தில் இப்போது நான் இருக்கும் இடத்தைத் தந்தது ஸ்ரீவள்ளிதான். அதற்காக இயக்குநர் சுகுமாருக்கு கடமைப்பட்டிருக்கிறேன். இதைச் சாத்தியமாக்கிய மேதை அவர்.
“புஷ்பா இல்லாமல் ஸ்ரீவள்ளி இல்லை. அதற்காக அல்லு அர்ஜுனுக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை ஸ்ரீவள்ளி வெறும் கதாபாத்திரம் அல்ல; உண்மையாக உணர்ந்து நடித்தேன்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அண்மையில் ரஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டாவின் குடும்பத்தினருடன் ‘புஷ்பா ‘2 படத்தைக் கண்டுகளித்தார்.
இந்நிலையில் ராஷ்மிகா அடுத்தடுத்து வெற்றிப் படங்களில் நடித்து வந்தாலும் விஜய் தேவரகொண்டாவுக்கு அண்மைய பெரிய வெற்றிப் படங்கள் என எதுவும் இல்லை. தொடர் தோல்விகளால் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.
தற்பொழுது கௌதம் தின்னனூரி படத்தில் நடித்து வருகிறார் விஜய் தேவரகொண்டா. விரைவில் படம் வெளியாக உள்ளது. அதன்பிறகு தில் ராஜு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படங்களால் விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் உயரும் என்றும் அதன் பின்னரே ராஷ்மிகாவுடன் திருமணம் குறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

