விமர்சிப்பவர்கள் மீது சீறிப் பாயும் வித்யாபாலன்

விமர்சிப்பவர்கள் மீது சீறிப் பாயும் வித்யாபாலன்

1 mins read
dd29e468-1b82-4a20-b5cf-8c0ebe101801
-

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் வித்யாபாலன் குறிப்பிடத்தக்கவர். இவர் 2003ல் 'பாலோ தேகோ' என்ற பெங்காலி படத்தில் அறிமுகமானவர். பின்னர் இந்தி, மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். மரத்தைச் சுற்றி நாயகனுடன் ஆடிப் பாடும் படங்களை விட தனக்குப் பெயர் வாங்கித்தரக்கூடிய கதைகளாக தேடிப்பிடித்து நடித்தார் வித்யாபாலன். அதில் சில்க் ஸ்மிதா வாழ்க்கைக் கதையில் உருவான 'த தர்ட்டிப் பிக்சர்ஸ்' படம் அவருக்குத் தேசிய விருது வாங்கிக்கொடுத்தது. அதன் பிறகு கர்ப்பிணியாக நடித்த 'கஹானி' படமும் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது.

பல நிகழ்ச்சிகளுக்கு நடிகைகள் அரைகுறை உடையணிந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் வித்யாபாலன் மட்டும் எப்போதும் புடவை அணிந்து செல்வதை வழக்கமாகிக்கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கு 'சேலைக்காரி' என்று முத்திரை குத்தி இருக்கிறது திரையுலகம். "எப்போது வெளியில் சென்றாலும் புடவையில்தான் செல்வேன். எல்லா வகையான புடவைகளையும் விரும்பி உடுத்துவேன். மற்ற உடைகளை எப்போதாவதுதான் உடுத்துவேன்.

"நான் புடவையில் வருவதைப் பற்றி நாகரிக உடை அணிந்து வருபவர்கள் விமர்சிக்கிறார்கள். மற்றவர்கள் விரும்பாவிட்டாலும் அதுபற்றி எனக்குக் கவலை இல்லை. புடவை உடுத்துவதுதான் எனக்கு மகிழ்ச்சி. என்னைப் பார்த்து பல நடிகைகள் புடவை உடுத்தி வருவதாகக் கூறுகிறார்கள். அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் யார் என்ன சொன்னாலும் நான் கவலைப்படமாட்டேன்." என்று சீறுகிறார் வித்யா பாலன்.