'ரசிகர்களை ஏமாற்றக்கூடாது'

'ரசிகர்களை ஏமாற்றக்கூடாது'

1 mins read
924f9a6d-9012-443b-846e-3fe29dddc1a7
-

சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து தமிழ்த் திரையுலகின் முக்கிய நாயகனாக உருவெடுத்திருக்கும் சிவகார்த்திகேயன் தொலைக்காட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது தனது வார்த்தை ஜாலத்தால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்தவர். அதனால் திரையுலகிலும் நகைச்சுவை கலந்த கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். இதுபற்றி சிவகார்த்திகேயன் கூறுகையில், "என்னுடைய ஒவ்வொரு படங்களிலுமே ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என்று நான் முயற்சி செய்வதுண்டு. என்றாலும், அதிகமாக 'ரிஸ்க்' எடுக்க நான் தயங்குகிறேன். "காரணம், ரசிகர்களைப் பொறுத்தவரை தியேட்டருக்கு வந்து உற்சாகமாகப் படம் பார்க்க ஆசைப்படுகிறார்கள்.

"இரண்டு மணி நேரம் தங்களை மறந்து சிரிக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் நான் எனது ஒவ்வொரு படத்தின் கதையையும் நகைச்சுவைக்கு முன்னுரிமை கொடுத்து 'ஓகே' செய்கிறேன். "இப்போது நடித்து வரும் 'ரெமோ' படத்தில் கூட நகைச்சுவைக் காட்சிகள் நிறைய உள்ளன. "சிவகார்த்திகேயன் படமென்றால் உற்சாகமாகப் படம் பார்க்கலாம் என்று நம்பி திரையரங்கிற்குள் நுழைபவர்களை ஏமாற்றக்கூடாது என்பதில் நான் எப்போதுமே கவனமாக இருக்கிறேன்," என்கிறார் அவர். சிவகார்த்திகேயன் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 'ரெமோ' படத்தை புதிய இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறார் மோகன்ராஜா. இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப் பட்டிருக்கிறார்.