மனதுக்குப் பிடித்த பெண் வந்தால் மட்டுமே திருமணம் செய்வேன்

மனதுக்குப் பிடித்த பெண் வந்தால் மட்டுமே திருமணம் செய்வேன்

2 mins read
72d579ee-6716-4153-8e58-6334653d40be
-

'இது நம்ம ஆளு' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ரசிகர்களுடன் காணொளி வசதி மூலம் உரையாடினார் சிம்பு. அப்போது ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். சிம்பு முன்பு போல் இல்லை. முன்பு எதற்கும் தயங்காமல் பதில் சொல்வார். இப்போது அதிரடியாக, அதே சமயத்தில் கவனமாக பதில்களைக் கோர்க்கிறார். "இது நம்ம ஆளு' இந்தளவு வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. நான் வெற்றியைப் பற்றி எல்லாம் அதிகம் நினைக்கவில்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், படம் நன்றாகப் போகிறது என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. செல்வராகவன் சார் இன்னொரு படத்துக்கு தயாராகிறார். அவர் அதை முடித்துவிட்டு வந்தவுடன் இருவரும் இணையும் 'கான்' படம் தொடங்கிவிடும்.

"உடல் எடையை படத்துக்காகக் கூட்டி இருக்கிறேன். எப்போதுமே ஒல்லியாகத்தான் இருப்பேன். அது உங்களுக்கும் தெரியும். 'சிலம்பாட்டம்' நேரத்தில் ஒரு பாத்திரத்துக்கு என்னால் எடையைக் கூட்டமுடியாமல் போனது. இப்போது வயதானதால் உடல் எடை அதிகமாகிவிட்டது என நினைக்கிறேன். "அடுத்து நடிக்கும் 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் ஏற்றுள்ள ஒரு பாத்திரத்துக்கு இப்படியொரு உடலமைப்பு தேவைப்படுகிறது. அதற்கான படப்பிடிப்பு முடிந்தவுடன் மீண்டும் எடையைக் குறைக்க இருக்கிறேன்.

"திருமணம் செய்யலாம் என்ற எண்ணமெல்லாம் இருக்கிறது. நல்ல, மனதுக்குப் பிடித்த பெண் வந்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்ள முடியும். அந்தப் பெண் வருகிற அன்றைக்கு வரட்டும். இடையில் அமீர் சார் படம் இருக்கிறது. அவர் மற்றொரு படம் எடுத்து வருகிறார். அதை முடித்தவுடன் அடுத்தாண்டு அவருடன் படம் பண்ணுவேன். "இதற்கு முன்பே ஒப்புக்கொண்ட 'வேட்டை மன்னன்' படத்தில் பிரச்சினை என்றால், அது தயாரிப்பாளர்தான். அவர் பண்ணுங்கள் என்றால் நாங்கள் பண்ணத் தயாராக இருக்கிறோம். காதல் கீதத்தைப் பொறுத்தவரை அதில் ஒரு பெண் குரல் இருக்கிறது. அது யாரென்பதை இப்போது சொல்ல முடியாது. அதை முடித்தவுடன் வெளியிட்டு விடுவேன்.