ப. பாலசுப்பிரமணியம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி' திரைப்படம் வந்தவுடன் பார்த்தே ஆக வேண்டும் என்ற பேரார்வத்தில் ரசிகர்கள் நுழைவுச்சீட்டின் விலையைக்கூட பெரிதுபடுத்தவில்லை. நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் திரையிடப்பட்ட 'பிரிமியர்' காட்சியைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஒரு டிக்கெட்டுக்கு $25 கட்டணம் செலுத்த வேண்டியிருந்தது. இதற்காக 'ரெக்ஸ் மெக்கென்சி', 'கோல்டன் மைல் ரெக்ஸ்' திரையரங்குகளில் நேற்று முன்தினம் இரவு 7.00 மணியிலிருந்து கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் ஆயிரக்கணக்கில் வந்ததால் பாதுகாப்புத் தடைகளைப் போட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் உதவி யுடன் ரசிகர்களை வரிசைப்படுத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டியிருந்தது.
இதுவரையில் இல்லாத வகையில் ஆக உயர்ந்த கட்டணத்தில் நுழைவுச் சீட்டுகள் விற்கப்பட்டதாகக் கருதப்படும் 'கபாலி' திரைப்படத்தை முதலில் பார்க்கச் சென்றவர்களுக்கு ஓர் ஆச்சரியமும் காத்திருந்தது. திரைப்படம் தொடங்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னர், ரஜினியின் 'கட் அவுட்' உருவப் படம் மேடைக்குக் கொண்டுவரப்பட்டது. விசில் பறக்க, ரசிகர்களின் கூச்சலும் ஆரவாரமும் அரங்கை அதிர வைக்க, ரஜினியின் உருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, கற்பூரம் காட்டப்பட்டது. இதன் தொடர்பில் பேசிய 'ரெக்ஸ்' அரங்கின் உரிமையாளர் திரு செந்தில் குமார் "இது முன்கூட்டியே திட்டமிட்ட விளம்பர உத்தியாகும்," என்றார்.

