அமலாபாலை விட்டுப் பிரிவதற்கான காரணத்தை அவரது கணவரும் இயக்குநருமான விஜய் விவ ரித்துள்ளார். தங்களது பிரிவுக்கான பின்னணி குறித்து எதுவும் தெரியாமல், குறிப்பிட்ட சில ஊடகங்கள் பரப்பும் வதந்திகளால் தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "நானும் அமலாவும் பிரிகிறோம் என்ற செய்தி உண்மைதான், ஆனால் மற்ற எல்லா தகவல்களும் முற்றிலும் பொய்யானது. "எங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையை நான் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை.
"இயல்பாகவே சமுதாயத்தின் மீதும் பெண்கள் மீதும் அதிக அக்கறையும் மரியாதையும் கொண்ட வன் நான். அமலா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால், திருமணத்திற்குப் பிறகும் அவரின் விருப்பத்திற்கு என்னால் முடிந்த ஆதரவைக் கொடுத்து வந்தேன். அப்படி இருக்கும்போது, திருமணத்திற்குப் பிறகு அமலா நடிப்பதால்தான் நாங்கள் விவாகரத்து பெறுகிறோம் என்று பரவும் செய்திகள் அனைத்தும் பொய்தான். "நம்பிக்கை, நேர்மை ஆகிய இரு குணங்களே ஒரு வலுவான திருமண வாழ் விற்குச் சிறந்த பாலமாக செயல்படுகிறது. அந்த இரண்டும் உடைந்தபிறகு திருமண வாழ்வைத் தொடர்ந்தால் அதில் எந்தவித அர்த்தமும் இருக்காது. நாங்கள் இருவரும் பிரிந்துவிடுவோம் எனக் கனவில்கூட நான் நினைத்ததில்லை, ஆனால் அது நடந்துவிட்டது. மிகுந்த வலியை என் இதயத்தினுள் பூட்டிக் கொண்டு, எனது வாழ்க்கையைக் கண்ணியமான முறையில் தொடர நான் முடிவு செய்து விட்டேன்," என்று விஜய் கூறியுள்ளார்.

