சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலக்கட்டங்களில் அவருடன் முன்னணி நாயகிகள் நடிக்க நேரடியாக மறுத்து வந்தனர். தற்பொழுது அவரின் திரையுலக வளர்ச்சியைப் பார்த்து நான், நீ என்று முண்டியடித்துக் கொண்டு அவருடன் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள் முன்னணி நாயகிகள். அந்த வரிசையில் தற்பொழுது மோகன் ராஜா இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா நடிக்கிறார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக பொன்ராமுடன் கூட்டணி அமைத்துள்ளார். அந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதைப் படக்குழுவே அதிகாரபூர்வமாக தற்பொழுது வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனுடன் மோகன் ராஜா இயக்கும் படத்தில் நகைச்சுவை நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் அண்மையில் நயன்தாராவுடன் நடித்து வெளிவந்த படம் 'நானும் ரவுடிதான்'. இந்தப் படத்தில் இவருடைய நகைச்சுவை அனைவராலும் பேசப்பட்டது. சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி கூட்டணியில் உருவாகும் படம் நகைச் சுவைக்குப் பஞ்சம் இருக்காது என்கிறது படக்குழு. மணிரத்னம் படத்திலும் நடித்து வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.

