கவுண்டமணி நலமாக உள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். கவுண்டமணி மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதை அவரது செய்தித் தொடர்பாளர் விஜய் முரளி மறுத்துள்ளார். "அவ்வப்போது கவுண்டமணியைக் குறித்து இது மாதிரி புரளிகளை கிளப்பிவிடும் அந்த நல்ல மனிதர்கள் யார் என்று தெரியவில்லை. இதனால் அவர்களுக்கு என்ன பலன் என்றும் புரியவில்லை. "அண்மையில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயாவைக் குறித்தும் இதேபோல் வதந்திகளை பரப்பினார்கள். அவர் அறிக்கை வெளியிட்ட பிறகு வதந்திகள் காணாமல் போயின. "சற்று முன்புதான் கவுண்டமணியைச் சந்தித்தேன். உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். புதிய படம் ஒன்றின் கதையை கேட்டுக் கொண்டிருந்தார். விரைவில் அவர் நடிக்கும் அந்தப் படத்தின் அறிவிப்பு வெளிவரும். "மேலும் அப்படத்தின் துவக்க விழாவில் செய்தியாளர்களைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். எனவே உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். அவர் மிகவும் நலமாக இருக்கிறார்," என்று விஜய முரளி கூறியுள்ளார்.
கவுண்டமணி நலம் குறித்து வதந்தி
1 mins read
-

