விஜய்சேதுபதி நடித்த படங்கள் ஒரு சில வார இடைவெளியில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. தற்பொழுது அவர் நடிப்பில் வெளி வந்திருக்கும் 'றெக்க' படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. கே.வி.ஆனந்த் இயக்கும் 'கவண்' படத்தில் விஜய் சேதுபதியுடன் மடோனா செபஸ்டின் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.
இந்தப் படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி 'ரேணிகுண்டா' பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஒரு படத்திலும், புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் 'விக்ரம் - வேதா' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். பன்னீர் செல்வம் படத்திற்காக விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்க தற்போதைய முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் முன்னரே நடிக்க சம்மதித்த படங்கள் காரணமாக நடிக்க மறுத்துவிட்டார் என்கிறார்கள். சூர்யாவுடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினால்தான் கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி படத்தில் நடிக்க மறுத்தார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
மேலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ள இந்தப் படத்தை 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கப் போகும் விக்னேஷ் சிவன்தான் இயக்குவதாக இருந்தது. இடையில் சூர்யா படம் இயக்க வாய்ப்பு வந்ததும் விஜய் சேதுபதி படத்தை இயக்குவதில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார்.
அவர்தான் கீர்த்தி சுரேஷை விஜய் சேதுபதியுடன் நடிக்க வேண்டாம் என்று சொன்னதாகவும் அதோடு அந்தப் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த நயன்தாராவையும் நடிக்க வேண்டாம் என்று தடுத்ததாகவும் கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. தன்னுடைய இரண்டு படங்களுக்கும் ஏற்ற கதாநாயகியைத் தேடி வருகிறார் விஜய் சேதுபதி.

