தமிழ்த் திரையுலகம் எனக்கு நிறையக் கொடுத்திருக்கிறது என்று (கையை அகலமாக விரித்துக் காட்டுகிறார்) விஜய் சேதுபதி. நான் இந்தச் சினிமாவுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன். நான் காசு, பணத்தைச் சொல்லவில்லை. நிறையப் பேர்களின் அன்பைக் கொடுத்தது; நிறைய தைரியம் கொடுத்தது; வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது; நிறைய சவால்களைக் கொடுத்தது என்று மனம் திறக்கிறார் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி. "சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் காசு சம்பாதித்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று ஒரு நம்பிக்கை இருந்தது. ஆனால் காசு, பணம் சம்பாதித்த பிறகு எதுவும் சரியாகாது என்று இப்போது தோன்றுகிறது.
"இப்போது நான் சினிமா பந்தயத்தில் காலை வைத்துவிட்டேன். இனிமேல் நான் நினைத்தாலும் அதிலிருந்து வெளியேற முடியாது. இங்கே ஓடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். ஏன் இப்படி நடக்கிறது என்று முன்னாடி தோன்றும். இப்போது இது இப்படித்தான் நடக்கும் என்று புரிந்துகொண்டு விட்டேன்.
தமிழ்ச் சினிமாவில் விஜய் சேதுபதிக்கான இடம் என்ன?
"நான் எந்த இடத்தையும் எதிர்பார்க்கவில்லை. எதையும் மகிழ்ச்சியாக மன நிறைவாகச் செய்யனும் என்று முயற்சி செய்கிறேன். தொடர்ந்து படங்களாக நடிக்கவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் கிடையாது. எனக்கும் மக்களுக்கும் பிடித்த மாதிரி படங்கள் தரவேண்டும். "இந்த வருடம் தொடர்ந்து படப்பிடிப்புகள் இருக்கின்றன. நான் என் குடும்பத்தினருடன் அதிக நேரம் இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அது நடைமுறையில் ஒத்து வருமா என்று தெரியவில்லை. ஒத்துக் கொண்ட படங்களை நன்றாக நடித்து மக்கள் விரும்பும் படங்களாகத் தரவேண்டும் என்பதே என் ஆசை," என்கிறார் விஜய் சேதுபதி.