தமது படங்கள் பலதரப்பட்ட மக்களைச் சென்றடைவது மகிழ்ச்சியைத் தருவதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். ஹாலிவுட் படத்தில் நடித்திருப்பதன் மூலம் தாம் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளதாகக் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார். 'ராஞ்சனா', 'ஷமிதாப்' படங்களில் நடித்ததன் மூலம் இந்தித் திரையுலகை நன்கு புரிந்துகொள்ள முடிந்ததாகக் குறிப்பிடுபவர், இந்தி படங்களை இயக்குவதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறுகிறார். "தற்போது நான் நடித்து வரும் படங்கள் பலதரப்பட்ட மக்களைச் சென்றடைகின்றன. தற்போது உலகம் மிகச் சிறியதாகிவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழல் வேறு.
"இப்போது எந்த தேசத்துக்கும் நகரத்துக்கும் கண்டத்துக்கும் சென்று பாலிவுட் என்று சொன்னால் அவர்களுக்குப் புரிகிறது. எல்லோரும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்," என்கிறார் தனுஷ். தற்போது புதிய கதாபாத்திரங்களை முன்வைத்து சோதனை முயற்சிகள் நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், கலைஞர்களுக்கு இப்படிப்பட்ட அருமையான வாய்ப்புகள் கிடைக்கும் கால கட்டத்தில் பணியாற்றுவது தமக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும் தருவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

