வர்த்தக ரீதியிலும் சரி நடிப்பிலும் சரி வெற்றி நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா. ஆரம்ப காலத்தில் தெலுங்கு, தமிழ்ப் படங்களில் நடித்து வந்த இவர் அங்கு வாய்ப்பு குறையவே அண்மைக்காலமாக இந்திப் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இந்தியில் இவர் நடித்த 'பர்பி' திரைப் படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் இலியானாவின் நடிப்பால் பிரமித்துப் போனார்கள். இந்நிலையில் நடிகை இலியானா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது, "நான் சினிமாவில் நடிக்க வந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன. 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டேன்.
"இதில் எனக்கு மன நிறைவைத் தந்த படம் என் றால், 'பர்பி' உள்ளிட்ட ஒரு சில படங்களை மட்டுமே கூற முடியும்," என விரக்தியுடன் பேசினார். தொடர்ந்து தன் எதிர்கால திரைப் பயணம் குறித்து மனம் திறந்து பேசிய அவர், "எனது இந்த நீண்ட நாளைய திரைவாழ்க்கை எனது திட்டமாக இல்லை. "நான் தெலுங்கு, தமிழ்ப் படங்களில் அறிமுகமானபோது கதை, அதில் எனக்குள்ள முக்கியத்துவம் போன்ற எதையுமே கேட்காமல் நடிக்க சம்மதித்தேன். "இப்போது, அதையெல்லாம் யோசித்துப் பார்த்தால், குழந்தைத்தனத்துடன் நடந்து கொண்டதாகவே தெரி கிறது. "இனிமேல் எனக்கும் என் நடிப்புக்கும் முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க சம்மதிக்கமாட்டேன். "ஒரு படத்தில் நடித்தாலும் நல்ல படத்தில் மட்டுமே நடிப்பேன்," என்றார் இலியானா.

