நல்ல இயக்குநரின் படத்தில் நடிக்கும் நடிகைகளும் புகழடைவார்கள் என்று கூறியுள்ளார் அனுஷ்கா. அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அனுஷ்கா, "என்னைவிடத் திறமையான நடிகைகள் இருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக எனக்கு நல்ல கதைகள் கிடைத்தன. அதனால்தான் திறமையைக் காட்ட முடிந்தது. "சினிமாவுக்காக உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்கள் படங்களில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. "எனவே நல்ல கதாபாத்திரங்களில் நடித்துத் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு நடிகைகளுக்கு அமைய வேண்டியது முக்கியம். "அருந்ததி, ருத்ரமாதேவி, இஞ்சி இடுப்பழகி ஆகிய படங்கள் அப்படித்தான் எனக்குக் கிடைத்தன.
அருந்ததி படம் சினிமா வாழ்க்கையில் எனக்குத் திருப்பு முனையை ஏற்படுத்தியது. "இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையைக் கூட்டி நடித்தேன். அந்தக் கதாபாத்திரமும் திருப்தியைத் தந்தது. பாகுபலி படத்தில் இன்னொரு பரிணாமத்தில் வந்தேன். "இந்தப் படங்கள் எனது கைவிட்டுப் போய் இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இவற்றில் என்னைத் தவிர வேறு எந்த நடிகையையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. "நடிகைகள் தானாகவே திறமையைக் காட்டி முன்னுக்கு வர முடியாது. ஒவ்வொரு நடிகையின் திறமைக்குப் பின்னாலும் இயக்குநர்கள் இருக்கிறார் கள். அவர்கள்தான் கதாபாத்திரங்களைச் செதுக்கிச் சிறப்பாக நடிக்க வைத்துப் புகழ் பெற வைக்கிறார்கள். "நான் நடிப்பதற்கு முன்னால் கதையையும் இயக்குநர் யார் என்பதையும்தான் முக்கியமாக பார்ப்பேன். கதை எனக்குப் பிடிக்க வேண்டும். இயக்குநரும் திறமையானவராக இருக்க வேண்டும்.

