'காதல் கசக்குதய்யா' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இளம் நாயகி வெண்பா. தற்போது 'பள்ளிப் பருவத்திலே' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் இறுதிக் காட்சியின் போது மிகுந்த பதற்றத்துக்கு ஆளானதாகச் சொல்கிறார் வெண்பா. அப்படி என்ன நடந்துவிட்டதாம்? "எனது கதாபாத்திரத்தின் பெயர் கனிமொழி. கதைப்படி மிக சாந்தமான ஒரு பெண். அந்த கதாபாத்திரத்தை இயக்குநர் எப்படி மெருகேற்றினார் என்பதை படம் பார்த்தால் உணர்வீர்கள். "இறுதிக் காட்சியில் எனது பங்களிப்புதான் அதிகம் என்று இயக்குநர் கூறினார். அப்போது முதலே பதற்றம் தொற்றிக்கொண்டது. குறிப்பிட்ட காட்சி படமாக்கப்பட்ட போது எனக்கு எந்த நெருக்கடியும் தொந்தரவும் இல்லை. "இருந்தாலும் பதற்றமாகவே இருந்தேன். எப்படியோ மனதளவில் என்னைத் தயார்படுத்திக்கொண்டு, காட்சி படமாக்கப்பட்டபோது கச்சிதமாக நடித்து முடித்தேன். அதற்காக எல்லோரும் என்னைப் பாராட்டினர். நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். இப்படத்தின் படப்பிடிப்பு கிராமப் பகுதிகளில் அதிகம் நடைபெற்றது. அதனால் படப்பிடிப்பின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து அனுபவித்தேன்," என்கிறார் வெண்பா.
படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
1 mins read
-

