பள்ளியில் படிக்கும் காலத்திலேயே திரையில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. நான் நினைத்த மாதிரியே திரைக்கு வந்துவிட்டேன். நான் அதிர்ஷ்டம் செய்தவள் என்று வெளிப்படையாகக் கூறினார் காந்தக் கண்ணழகி ஜனனி ஐயர். அவர் பேசுகையில், "படிக்கும்போதே 'மாடலிங்' செய்ய ஆரம்பித்தேன். அதனால்தான் எனக்குத் திரையில் நடிக்கவேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால் வீட்டில் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் என்று பலர் இருந்தனர். அதனால் நான் தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி கணினி பொறியியலாளராக ஆனேன். அமெரிக்காவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தாலும் என் கவனம் முழுவதும் திரையில் நடிக்கவேண்டும் என்பதிலேயே இருந் தது. "இயக்குநர் பாலா கேட்டதும் உடனேயே 'அவன் இவன்' படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டேன்.
அதிலிருந்து திரைத் துறைதான் என் வாழ்க்கை என்று முடிவெடுத்து விட்டேன்." இப்போது நடிக்கும் படங்கள் பற்றி சொல்லுங்கள்? "அடுத்தடுத்து 'விதிமதி உல்டா', 'பலூன்' படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கின்றன. 'டார்லிங் 2' படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்." திரைக்கு வருவதற்கு உங்களுக்கு எது கைகொடுத்தது? "என்னுடைய கண்கள். என்னுடைய முதல் படமான 'அவன் இவன்' படப்பிடிப்பில் இருந்த அனைவரும் என் கண்கள் அழகாக இருக்கின்றன என்று சொன்னார்கள். ஊடகங்களும் எனக்குக் 'காந்தக் கண்ணழகி' என்று பெயர் வைத்தன. மற்றபடி யார் மனதும் புண்படாமல் பேசுவது என் குணம். அதேசமயம் தைரியமான பொண்ணு. யாரும் என்னை ஏமாத்த முடியாது."

