தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வரலட்சுமி சரத்குமார் (படம்). தற்போது 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'வட சென்னை' ஆகிய படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்திற்குப் பிறகு தனது 'வுண்டர்பார் நிறுவனம்' மூலம் சொந்தமாகப் படம் ஒன்றைத் தயாரிக்கிறார். இதற்கு 'மாரி- 2' என்று தலைப்பிட்டுள்ளனர். பாலாஜி மோகன் எழுதி இயக்குகிறார். இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
மற்றொரு வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி உள்ளாராம். இதில் நடிக்க விருப்பமா என வரலட்சுமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோது, தொடக்கத்தில் தயங்கினாராம். முழுக் கதையையும் கேட்ட பிறகு முடிவெடுப்பதாகக் கூறினாராம். இதையடுத்து முழுக் கதையையும் கேட்ட பின்னர், கதாநாயகி அல்லாத பாத்திரமாக இருந்தாலும், அது முக்கிய கதாபாத்திரம் என்பதால் அதில் நடிக்க ஒப்புதல் கொடுத்துள்ளாராம். இதற்கிடையே விஷாலுடன் மேலும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் வரலட்சுமி. அதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருப்பதாகத் தகவல்.

