ராக்‌ஷி கண்ணா பக்கம் வீசும் அதிர்ஷ்டக் காற்று

1 mins read
1d5af640-dfec-4735-9311-10e947a0201a
-

'பாகுபலி' படங்களை இயக்கிய ராஜ மௌலி தற்பொழுது பல கதாநாயகர்களை வைத்து ஒரு படம் இயக்கத் தொடங்கி இருக்கிறார். கதைக்களம் அனைத்தும் முடிவான நிலையில் படத்தில் நாயகியாக நடிக்க ராக்‌ஷி கண்ணாவை ஒப்பந்தம் செய்திருக்கிறார். அண்மைகாலமாக தெலுங்கில் வெளியாகும் பெரிய படங்கள் மட்டுமின்றி சிறிய படங்களாக இருந்தாலும் அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு தனது கருத்தினை மனம் திறந்து பாராட்டி வருகிறார் 'பாகுபலி' இயக்குநர் ராஜ மவுலி. அந்த வகையில் கடந்த வாரம் வருண்தேஜ் நடிப்பில் வெளியான 'தொலி பிரேமா' படத்தைப் பார்த்து அவர் வெகுவாக பாராட்டினார்.

தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், "நான் காதல் படங்களின் ரசிகன் அல்ல. ஆனால், 'தொலி பிரேமா' படம் என்னை ரசிக்க வைத்துவிட்டது. வருண்தேஜ் சிறப்பாக நடித்துள்ளார். ராக்‌ஷி கண்ணா அழகாகவும் இருக்கிறார், அருமையாகவும் நடித்துள்ளார் என்று சொல்லி 'தொலி பிரேமா' படத்தையும் அதில் பணியாற்றியவர்களையும் பாரட்டியதோடு தனது படத்தின் நாயகியாக ராக்‌ஷி கண்ணாவையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். இந்தப் படம் 150 கோடி ரூபாய் வரவுசெலவுத் திட்டத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளில் தயாராகிறது. மேலும் சில தமிழ், மலையாள நடிகர்களையும் இந்தப் படத்தில் நடிக்க வைக்க பேசி வருகிறார் ராஜ மௌலி.