விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அண்மையில் பச்சையப்பன் கல்லூரியில் படப்பிடிப்பு எடுக்க அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடந்தது. விஜய் கல்லூரி வளாகத்திற்கு வந்திருக்கும் செய்தி அறிந்ததும் பல மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியேறி படப்பிடிப்பை பார்க்கச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி முதல்வரிடம் புகார் கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து படப்பிடிப்புக் குழுவினரை தொடர்புகொண்ட கல்லூரி முதல்வர் "கல்லூரி செயல்படும் நேரத்தில் படப்பிடிப்பு நடப்பதால் படிப்பு பாதிப்படைகிறது. அதனால் கல்லூரி நேரம் முடிந்ததும் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளுங்கள்," என்று கூறினார். அதனைத்தொடர்ந்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. "இனி பச்சையப்பன் கல்லூரியில் எந்தப் படப்பிடிப்பும் நடத்த அனுமதிக்க கூடாது," என்று மாணவர்களும் ஆசிரியர்களும் கூறியதை கல்லூரி முதல்வர் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

