நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் அதை தற்பொழுதுதான் இருவரும் பகிரங்கமாக உறுதி செய்தனர். விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்து இருக்கின்றனர். அதனால் நயன்தாரா தற்பொழுது மலையாளப் படங்களில் நடிக்க அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார்.
தென்னிந்திய மொழிகளில் மலையாளப் பட உலகம்தான் மூத்த நடிகைகளுக்குச் சொர்க்கம். திருமணத்துக்குப் பின் 40 வயதான பிறகும் நடிகைகளுக்கு கதாநாயகிகள் வேடங்கள் அங்கு கிடைக்கும். கதைகளையும் வலுவாக உருவாக்குகிறார்கள். மற்ற மொழிகளில் திருமணமான நடிகைகளை அக்கா, அண்ணி வேடங்களுக்கு முத்திரை குத்திவிடுவார்கள்.
தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது. ஆனாலும் மலை யாளத்தில் கதாநாயகிகள் தனித்து தங்களின் திறமையை வெளிப்படுத்த முடியும். தமிழில் 'இமைக்கா நொடிகள்', 'கொலையுதிர் காலம்', 'கோலமாவு கோகிலா', 'அறம் 2', 'விசுவாசம்', சர்ஜுன் இயக்கும் படம் என 6 படங்களைக் கையில் வைத்துள்ளார் நயன்தாரா. மேலும் சிரஞ்சீவி ஜோடியாக 'சைரா நரசிம்ம ரெட்டி' தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார். 'நம்பர் 1' நடிகையாக திகழும் நயன்தாரா அடுத்தடுத்து மலையாளப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக 'லவ் ஆக் ஷன் டிராமா' என்ற படத்திலும் நடிக்கிறார்.

