இயக்குநர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள திகில் படம் 'ஐல'. 'ஐஸ்வர்ய லட்சுமி' என்பதன் சுருக்கமே இத்தலைப்பாம். தம்பி உன்னி கிருஷ் ணன், ஜே.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் சாந்தினி நாயகியாக நடிக்கிறார். முதன்முறையாக புகைப்படக் கலைஞர் வேடம் ஏற்றுள்ளாராம். "திகில் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப்படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 'எமன்' படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் 'போராளி' திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
"நயன்தாரா, திரிஷா ஆகியோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது சாந்தினியும் இணைந்திருக்கிறார்," என்கிறார் இயக்குநர். "இதற்கு முன்பு தெலுங்கில் இரு திகில் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் 'ஐல' மாறுபட்ட கதையம்சம் கொண்டது. எனவே இதில் நடிப்பதை சவாலாகக் கருதுகிறேன். இது அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும் படமாக இருக்கும்," என்று சொல்லும் சாந்தினி, சத்தமில்லாமல் தமிழில் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

