அனுஷ்கா: போலித்தனம் பிடிக்காது

அனுஷ்கா: போலித்தனம் பிடிக்காது

2 mins read
21c19390-2d0f-401c-952f-b3150fa3e740
-

நிஜ வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த மாதிரி இருக்க வேண்டும் என்கிறார் அனுஷ்கா. அண்மைய பேட்டி ஒன்றில், சொந்த வாழ்க்கைக்கும் சினிமா தொழிலுக்கும் இடையே ஒரு கோடு போட்டு வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து படங்கள் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம். 'பாகுபலி', 'பாகமதி', 'ஓம் நமோ வெங்கடேசாயா' என அவர் நடித்த படங்கள் வசூலில் மட்டுமல்லாமல், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதையடுத்து மேலும் பல பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. புதுப் படங்களில் நடிப்பதற்காகக் கதை கேட்டு வருகிறார் அனுஷ்கா.

இந்நிலையில் தனது உடல் பெருத்துவிட்டது, முகத்தில் பொலிவு குறைந்துவிட்டது என்பன போன்ற விமர்சனங்களை அவர் கண்டுகொள்வதாக இல்லை. தனது போக்கில் சென்றுகொண்டிருக்கிறார். தனக்கும் நடிகர் பிரபாசுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பதாக வெளியான தகவல் குறித்தும் அவர் வாய் திறப்பதாக இல்லை. இந்நிலையில், தாம் நடிப்பது சினிமாவில் மட்டுமே என அண்மைய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"நிஜத்தையும் நிழலையும் நான் ஒன்றாகக் கலப்பது இல்லை. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் நிறைய பேர் என்னிடம் பலவற்றைக் கூறினர். நடிகையாகிவிட்டதால் பொது இடங்களுக்கு சாதாரண பெண்ணாகச் செல்லாமல், ஒப்பனையிட்டுக்கொண்டு, நல்ல ஆடைகளை உடுத்திக்கொண்டு செல்லவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தனர்.

"நானும் அதைக் கடைப்பிடித்தேன். அவர்கள் சொன்ன மாதிரி ஒப்பனையுடன் சென்றேன். ஆனால் அது எனது உண்மையான சுபாவத்துக்கு விரோதமாக இருந்தது," என்று அனுஷ்கா கூறியுள்ளார். அதன் பிறகு தன்னை மீண்டும் மாற்றிக்கொண்டு மனதுக்குப் பிடித்த மாதிரி உடை அணிந்து வெளியே செல்லத் தொடங்கினாராம். அது மிகவும் சௌகரியமாக இருந்ததாம்.

"படம் ஓடினால் திறமையானவர்கள் என்றும் ஓடாவிட்டால் திறமையற்றவர்கள் என்றும் சொல்ல முடியாது. வாழ்க்கை நமக்குப் பிடித்த மாதிரி இருக்கவேண்டும். மற்றவர்களுக்காகப் போலியாக வாழ்வது எனக்கு அறவே பிடிக்காது," என்கிறார் அனுஷ்கா.