தனது படங்களை அனைவரும் குடும்பத்துடன் கண்டு ரசிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்கிறார் அருள்நிதி. எப்போதும் ரசிகர்கள் மனதில் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் கவனமாக இருப்பதாகவும் அண்மைய பேட்டியில் தெரிவித்துள்ளார். அருள்நிதி நடிப்பில் உருவாகி உள்ள 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படம் தற்போது வெளியீடு காண்கிறது. இதில் சினிமாத்தனமாக தாம் எதையும் செய்யவில்லை என்றும், தமது கதாபாத்திரம் யதார்த்தமானதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். "நான் வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறேன். இது எனது 10ஆவது படம். நல்ல படங்களைக் கொடுத்தால் தான் அனைவரும் அதை திரையில் காண விரும்புவர். ரசிகர்களும் தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பர்.
"இந்தப் படத்தில் வாடகை கார் ஓட்டுநராக நடித்துள்ளேன். அந்த ஓட்டுநர் ஒரு பிரச்சினையில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார் என்பது தான் கதை. எனக்கான கதாபாத்திரத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்தேன்," என்கிறார் அருள்நிதி. படத்தில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் இருக்குமாம். பாடல்களும் சினிமாத்தனம் இல்லாமல் வெகு யதார்த்தமாக அமைந்துள்ளனவாம். இப்படத்தின் தலைப்புக்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகளை இரவு நேரத்தில் படமாக்கி உள்ளனர். "நாம் அடிக்கடி கேள்விப்படும் சம்பவங்களைக் கோர்த்து மிக விறுவிறுப்பாக இயக்குநர் மாறன் கதையை எழுதி, இயக்கியும் உள்ளார். இது ஒரு நாள் இரவில் நடக்கும் கதை. திகிலும் அதிரடியும் நிறைந்திருக்கும்.

