ஹரி இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான 'சாமி' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர். இதையும் ஹரி தான் இயக்குகிறார். இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக திரிஷாவுக்கு பதில் கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரமுடன் மோதும் வில்லனாக பாபி சிம்ஹா நடிக்க, இதிலும் காவல்துறை அதிகாரியாகவே நடிக்கிறார் சீயான்.
நகைச்சுவைப் பகுதிக்கு சூரி பொறுப்பேற்க, நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ஷிபு தமின் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பணிகள் சில பிரச்சினைகள் காரணமாக முடங்கி இருப்பதாகத் தகவல். எனவே தமது சந்தை மதிப்பை உயர்த்திப் பிடிக்க 'சாமி 2' தான் கைகொடுக்கும் என உறுதியாக நம்புகிறாராம் விக்ரம். எனவே இப்படத்தின் வெளியீட்டை தனது ரசிகர்கள் போலவே அவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகத் தகவல்.

