தனது 15 ஆண்டு கால கனவு நனவாகி இருப்பதாகச் சொல்கிறார் நடிகர் பிரசன்னா. ஹைதராபாத்தில் நடந்த ஃபிலிம் பேர் விருது வழங்கும் நிகழ்வில் இவருக்குச் சிறந்த துணை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகச் சொல்கிறார் பிரசன்னா. இந்த விருது நிகழ்வில் மனைவி சினேகாவுடன் அவர் கலந்து கொண்டார். தனக்கு விருது கிடைத்ததை இன்னும்கூட நம்பமுடியவில்லை என்று பிரசன்னா கூறுவதைக் கேட்கும்போது அவரது உற்சாக மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
தனது இன்றைய வளர்ச்சிக்கும், தான் விருது பெற்றதற்கும் முழுமுதற் காரணம் இயக்குநர் சுசி கணேசன்தான் என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார். சுசி கணேசன் இயக்கிய 'திருட்டுப்பயலே-2' படத்தில் நடித்ததற்காகவே பிரசன்னாவுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. "மற்றவர்களுக்கு நான் பெற்றிருப்பது வெறும் விருதாக மட்டுமே தோன்றும். ஆனால், என்னைப் பொருத்தவரை இது பெரும் கௌரவம். என் மீது வைக்கப்பட்ட நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி. எனவே, இயக்குநர் சுசி கணேசனுக்கு ஒற்றை வார்த்தையில் நன்றி தெரிவிப்பது மட்டும் போதாது.

