இன்றைய தேதியில் கோடம்பாக்கத்தில் அதிகப் படங்களைக் கைவசம் வைத்திருப்பவர் விஜய்சேதுபதிதான். எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அது சிறியதோ, பெரியதோ மனதுக்குப் பிடித்திருந்தால் உடனே நடிக்க சம்மதித்துவிடுகிறார்.
வில்லனாக நடிப்பதற்கும் தயங்கமாட்டேன் என்று பலமுறை கூறியவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின்மூலம் சொன்னதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் கன்னடப் படம் ஒன்றிலும் வில்லனாக நடிக்கப்போகிறாராம்.
சிவ் கணேஷ் இயக்கும் 'அக்காடா' என்ற அப்படத்தில் வசந்த் விஷ்ணு என்பவர் நாயகனாக நடிக்கிறார்.
கதைப்படி வில்லனுக்குக் கூடுதல் முக்கியத்துவம் இருப்பதாகக் கருதினாராம் விஜய் சேதுபதி. பிறகென்ன அதில் நடிக்க சம்மதித்துவிட்டார். விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் 'ஜுங்கா'. இதில் அவருடன் இணைந்து சாயிஷா நடித்துள்ளார். இதற்கிடையே சீதக்காதி, 96, சூப்பர் டீலக்ஸ் என அவரது நடிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகவுள்ளன.

