இவர் ஒரு சிறந்த நடிகர். மாறுபட்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வித்தைத் தெரிந்தவர். இவரைத் தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க காத்திருக்கும் இயக்குநர்கள் ஏராளம். இவருக்கு மக்களிடத்தில் 'மக்கள் செல்வன்' என்ற அடையாளம் உண்டு. அவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிக்கிறார் என்றால் கண்ணை மூடிக்கொண்டு தயாரிப்பாளர்களும் விநியோகிப்பாளர்களும் அவருடைய படத்தை வாங்க போட்டி போடுகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடித்து இந்த மாதம் 27ஆம் தேதியன்று 'ஜுங்கா' வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் 'ஜுங்கா' படக்குழுவினருடன் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் அருண் பாண்டியன், விஜய் சேதுபதி, இயக்குநர் கோகுல், சரண்யா பொன்வண்ணன், சுரேஷ் மேனன், மடோனா செபாஸ்டியன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின், படத்தொகுப்பாளர் ஷாபு ஜோசப், பாடலாசிரியர் லலிதானந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விஜய் சேதுபதி பேசுகையில், 'இயக்குநர் கோகுல் மீது எனக்கு எப்போதும் பெரிய நம்பிக்கை உண்டு. அவருடைய எண்ண அலைகள் எப்போதும் என்னை வசீகரிக்கும். அதனை என்னால் எளிதில் உட்கிரகிக்க இயலும். இதுதான் 'ஜுங்கா'வில் நான் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு முதல் காரணம்.

